
பாகிஸ்தான்–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்தது.
>
> இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
>
> முதல் இரு ஆட்டங்களில் (120 ரன், 123 ரன்) சதம் விளாசிய பாபர் அசாம் இந்த ஆட்டத்திலும் சதத்தை ருசித்து ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தினார். அவர் 106 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 117 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ சதங்களை பதிவு செய்த 2–வது வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார்.
>
> இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து இருந்தார்.
>
> ஒட்டுமொத்தத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் சதம் அடித்த 8–வது வீரர் என்ற சிறப்பையும் பாபர் அசாம் பெற்றார்.
>
> இதேபோல் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அசார் அலியும் (101 ரன்) செஞ்சுரி போட்டார். 3–வது சதம் கண்ட அசார் அலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனைக்குரியவரானார். இதற்கு முன்பு இன்ஜமாம், அப்ரிடி கேப்டனாக தலா 2 சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
>
> பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44 ஓவர்களில் 172 ரன்னில் சுருண்டது.
>
> இதனால் பாகிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3–0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.