இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.
அதன்பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடர் ஆடியது. அந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணி தோல்வியை தழுவியது. 2011ம் ஆண்டு 0-4 எனவும் 2014ம் ஆண்டு 1-3 எனவும் டெஸ்ட் தொடரை இழந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை இழந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியும் தொடரை வெல்வதில் தீவிரமாக உள்ளது. இந்திய அணி எப்போதுமே பேட்டிங்கில் வலுவான அணியாகத்தான் திகழ்ந்துவருகிறது.
ஆனால் இம்முறை, புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் என மிரட்டலான பவுலிங் வரிசையை கொண்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு, மிகச்சிறந்த கலவையில் உள்ளது என ஏற்கனவே சச்சின் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர் அலெஸ்டர் குக், இந்திய அணியுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஆடிவருகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணி ஐந்து முதல் 6 மாறுபட்ட திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டதில்லை. இந்த முறை இந்திய அணி வித்தியாசமான திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. என்னுடைய கடந்த கால அனுபவத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.