இங்கிலாந்து அணிக்கு அடி மேல் அடி..! அடுத்தடுத்த அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Aug 21, 2018, 6:08 PM IST
Highlights

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. 
 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. 521 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டமான இன்றைய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிற்கு கீப்பிங் செய்யும்போது கைவிரலில் அடிபட்டுள்ளதால் அவர் இந்த இன்னிங்ஸிலும் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுவது சந்தேகம்தான். எனவே இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலே போதும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை இந்த இன்னிங்ஸில் பேர்ஸ்டோ ஆடினாலும் விரலில் காயம் உள்ளதால் கண்டிப்பாக விக்கெட்டை விரைவில் இழந்துவிடுவார். 

இந்த போட்டியில் தோல்வியடையப் போகும் இங்கிலாந்து அணிக்கு எஞ்சிய போட்டிகளில் பேர்ஸ்டோ ஆடுவது சந்தேகம் என்பது ஒரு இழப்பாக உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அனுபவ தொடக்க வீரரான அலெஸ்டர் குக்கின் மனைவி கர்ப்பாமாக இருக்கிறார். அடுத்த வாரத்தில் குக்கின் மனைவிக்கு 3வது குழந்தை பிறக்க உள்ளது. எனவே அந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க விரும்பினால், குக் சென்றுவிடுவார். குக் சென்றால் அந்த இடத்தையும் நிரப்ப வேண்டும். குக் தொடர்ச்சியாக 157 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் குக் ஆடவில்லை என்றால், அவரது சாதனை முடிவுக்கு வந்துவிடும். 

குக்கிற்கு பதிலாக கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக ஆடிய ரோரி இங்கிலாந்து அணியில் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்க உள்ளது. 
 

click me!