#IPL2021 அடுத்த போட்டிக்கு அவர் வந்துருவார்..! மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஜாகீர் கான் சொன்ன குட் நியூஸ்

By karthikeyan VFirst Published Apr 12, 2021, 6:08 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடிராத குயிண்டன் டி காக், கேகேஆருக்கு எதிரான அடுத்த போட்டியில் ஆடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குநர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 9ம் தேதி நடந்த முதல் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி நடப்பு சாம்பியனும் 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸை எந்தவகையிலும் பாதிக்காது. 

ஏனெனில் 2013 ஐபிஎல்லில் இருந்து ஒரு சீசனில் கூட, சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதே இல்லை. ஆனால் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. எனவே முதல் தோல்வி மும்பை இந்தியன்ஸை பாதிக்காது. 

குவாரண்டினில் இருந்ததால், ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் குயிண்டன் டி காக் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய ஆஸி., வீரரான கிறிஸ் லின், அதிரடியாக ஆடி 49 ரன்கள் அடித்தாலும், நன்றாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மாவை ரன் அவுட்டாக்கினார்.

இந்நிலையில், கேகேஆருக்கு எதிராக 13ம் தேதி(நாளை - செவ்வாய்க்கிழமை) நடக்கும் போட்டியில் டி காக் ஆடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

டி காக் குவாரண்டினை முடித்து, ஞாயிற்றுக்கிழமையே மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். எனவே கேகேஆருக்கு எதிரான அடுத்த போட்டியில் ஆடுவார் என்பதை ஜாகீர் கான் உறுதி செய்துள்ளார்.
 

click me!