
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.
இந்நிலையில், ஐபிஎல்லில் விராட் கோலி எப்படி ஆடுகிறார், ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிடுகிறாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கோலி. அவரது சராசரி வெறும் 16. இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 38வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி தொடர்ந்து திணறிவரும் நிலையில், அவருக்கு சிறிய பிரேக் தேவை என்றும், அதனால் ஐபிஎல்லில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், விராட் கோலி கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்; மக்களும் தான். சதங்களாக விளாசி, கோலி உயர்ந்த பென்ச்மார்க்கை செட் செய்துள்ளார். ஆனால் பெரிய வீரர்களுக்கு இது நடக்கும். விராட் கோலி எதைப்பற்றியும் யோசிக்காத பெர்சனாலிட்டியாக மீண்டும் மாறவேண்டும். அவர் அவரை மாற்றிக்கொண்டால், பழைய கோலியாக மாறி பிரித்து மேயலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.