இதை மட்டும் செய்யுங்க.. அப்புறம் பாருங்க அந்த பையன் எப்படி தெறிக்கவிடுறான்னு.. அணி நிர்வாகத்துக்கு யுவராஜ் சிங்கின் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 9:46 AM IST
Highlights

ரிஷப் பண்ட்டிடமிருந்து அவரது சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இந்திய அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டுவிட்டார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

மூன்றுவிதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட்டே முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இவர் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதால், அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் சொதப்பினார். நெருக்கடியான சூழலிலும் சொதப்பினார், நெருக்கடி இல்லாத நிதானமாக ஆட வாய்ப்பிருந்த சூழலிலும் சொதப்பினார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக வாய்ப்புள்ள சஞ்சு சாம்சனும் இஷான் கிஷானும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அதனால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. 

ரிஷப் பண்ட்டின் அவசரமும், தவறான ஷாட் செலக்‌ஷனும் தான் அவர் சோபிக்க முடியாமல் போவதற்கு காரணமே தவிர அவர் நல்ல பேட்ஸ்மேன் தான். அவரது தவறான ஷாட் செலக்‌ஷன் தான் அவர் செய்யும் தவறு என்பதை அறிந்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அண்மையில் ரிஷப் பண்ட் ஷாட் செலக்‌ஷனில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மோசமான ஷாட்டுகளை ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிருவேன் எனவும் பாசமாக மிரட்டியிருந்தார். 

பயமற்ற ஆட்டத்துக்கும் கவனக்குறைவான பொறுப்பற்ற ஆட்டத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை இளம் வீரர்கள் உணர வேண்டும் என்று ரிஷப் பண்ட்டிற்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அறிவுரை கூறியிருந்தார். 

அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை கையாளும் விதம் முன்னாள் வீரர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளாளுக்கு ஒன்று சொல்லி, ரிஷப் பண்ட்டை சாடியதை கடுமையாக விமர்சித்திருந்தார் கவுதம் கம்பீர். இளம் வீரரை இப்படியா கையாளுவது? அணிக்கு வந்த புதிதிலேயே இளம் வீரர் ஒருவரிடமிருந்து விவேகமான ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு என்று அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியிருந்தார் கம்பீர். 

இந்நிலையில், யுவராஜ் சிங்கும், அணியில் ரிஷப் பண்ட் நடத்தப்படும் விதத்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், ரிஷப் பண்ட்டிடமிருந்து அவரது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றால், அவரை அடக்கியோ மிரட்டியோ எல்லாம் அதை செய்யமுடியாது. அவரது கேரக்டரை நன்றாக தெரிந்துகொண்டு உளவியல் ரீதியாகவும் அவரை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவரை அணுகினால் தான் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும். எனவே கேப்டனும் பயிற்சியாளரும் ரிஷப் பண்ட்டின் கேரக்டரின் அடிப்படையில் அவரை அணுகி அவரிமிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர வேண்டும். 

அதைவிடுத்து அவரை அடக்குவது எந்தவகையிலும் உதவாது. ரிஷப் பண்ட் திறமையான இளம் வீரர். டெஸ்ட் அணியில் இணைந்த உடனேயே வெளிநாடுகளில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். எனவே அவர் மிகத்திறமையான வீரர் தான். எனவே அவரிடமிருந்து எப்படி அவுட்புட்டை வாங்க வேண்டுமோ அப்படி வாங்க வேண்டும். முதலில் அவரை பற்றி மீடியாக்களில் அணி நிர்வாகத்தினர் பேட்டியளிப்பதை நிறுத்த வேண்டும் என்று யுவராஜ் சிங் கடும் காட்டமாக தெரிவித்துள்ளார். 

click me!