ஓய்வு அறிவித்த இர்ஃபான் பதான்.. தம்பியுடனான மறக்கமுடியாத தருணத்தை பகிர்ந்த அண்ணன் யூசுஃப்.. பதான் சகோதரர்கள் ஆடிய ருத்ரதாண்டவத்தின் ஃப்ளாஷ்பேக்

By karthikeyan VFirst Published Jan 5, 2020, 11:18 AM IST
Highlights

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இர்ஃபான் பதான் ஓய்வு அறிவித்த நிலையில், களத்தில் அவருடனான மறக்கமுடியாத தருணத்தை யூசுஃப் பதான் பகிர்ந்துள்ளார். 
 

2003ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இர்ஃபான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளிலும் 120 ஒருநாள் போட்டிகளிலும் இர்ஃபான் பதான் ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் இர்ஃபான் பதான்.  ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்தியது அவர் தான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சல்மான் பட், யூசுஃப், யூனிஸ் கான் ஆகிய சிறந்த வீரர்களை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தியவர். 

2012ம் ஆண்டுக்கு பிறகு இர்ஃபான் பதான் இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணியில் இருந்தார். அதன்பின்னர் கடந்த 2 சீசன்களிலும் ஆடவில்லை. இந்நிலையில் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் இர்ஃபான் பதான் ஓய்வு அறிவித்துள்ளார். 

இர்ஃபான் பதானுக்கு முன்னாள் வீரர்களும், அவருடன் ஆடிய சக வீரர்களும் அவருடனான நினைவுகளை பகிர்ந்ததோடு, அவரது புகழ்பாடி அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், இர்ஃபான் பதானுடன் களத்தில் மறக்கமுடியாத தருணத்தை அவரது சகோதரரும் இந்திய அணியில் ஆடியவருமான யூசுஃப் பதான் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய யூசுஃப் பதான், 2007ல் டி20 உலக கோப்பையை வென்றதுதான் இர்ஃபானுடன் ஆடியதில் மறக்கமுடியாத தருணம் என்று தெரிவித்தார். 2007 டி20 உலக கோப்பையில் ஆடிய இந்திய அணியில் பதான் சகோதரர்கள் இருவருமே ஆடினர். 

இருவரும் கிரிக்கெட் ஆட தொடங்கியது குறித்த நினைவுகளை பகிர்ந்த யூசுஃப் பதான், ஜும்மா மசூதியில் தான் நாங்கள் கிரிக்கெட் ஆட தொடங்கினோம். அப்போது மிகவும் ஆர்வமுடன் ஆடுவோம். பின்னர் பரோடா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அண்டர் 14 சாம்பியன்ஸில் ஆடினோம். பரோடா கிரிக்கெட் சங்கத்திற்காக ஆடினோம். தோல்வியால் துவழாமல் எப்போதுமே மகிழ்ச்சியுடன் புன்முறுவலுடன் இருப்பார் இர்ஃபான். இர்ஃபான் என்றுமே என் மனதில் நீங்கா நினைவுகளுடன் இருப்பார் என்று தெரிவித்த யூசுஃப் பதான், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். 

2009ல் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், பதான் சகோதரர்கள் இணைந்து ஆடிய அதிரடி பேட்டிங்கை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. 172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 15.1 ஓவரில் 115 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிய அந்த நேரத்தில் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற சூழலில் யூசுஃப் பதானும் இர்ஃபான் பதானும் இணைந்து பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து நொறுக்கி, 4 பந்துகள் மீதமிருக்கும் வகையில், இந்திய அணியை 19.2 ஓவரிலேயே வெற்றி பெற செய்தது குறிப்பிடத்தக்கது. 

click me!