பென் ஸ்டோக்ஸின் முடிவை நாங்க மதிக்கிறோம் - ரஹானே

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 10:16 PM IST
Highlights

கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் பென் ஸ்டோக்ஸின் முடிவை தாங்கள் மதிப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதால், கொரோனா நெறிமுறைகள் மிகக்கடுமையாக பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருந்துதான் ஆடிவருகின்றனர்.

பயோ பபுள் வீரர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், மன இறுக்கத்தையும் உண்டாக்குகிறது. கிரிக்கெட் வீரர்கள் மனவலிமையுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. பல வீரர்கள் இந்த பயோ பபுளில் கஷ்டப்பட்டு இருந்தாலும், சில வீரர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில், தனது மனநிலை சரியில்லை என்று கூறி கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்க விரும்புவதாக கூறி ஒதுங்கினார் இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் என அடுத்தடுத்து முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் இருக்கின்றன. ஆனாலும் தற்காலிகமாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்குவதாக திடீரென அதிரடியாக அறிவித்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் முடிவு, அடுத்தடுத்து முக்கியமான கிரிக்கெட் தொடர்களை எதிர்நோக்கியுள்ள இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவுதான் என்றாலும், அது அவரது தனிப்பட்ட முடிவு.

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸின் முடிவு குறித்து பேசியுள்ள ரஹானே, பயோ பபுள் வாழ்க்கை சவாலானது. வீரர்களின் பார்வையிலிருந்து இதை பார்க்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் அவரது முடிவை எடுத்துள்ளார். இது வீரர்களின் தனிப்பட்ட மனநிலையை பொறுத்தது. பயோ பபுளை ஒவ்வொரு வீரரும் அனுபவிப்பதை பொறுத்தது அவரவர் மனநிலை. வீரர்களின் மனநிலை ரொம்ப முக்கியம். எனவே ஸ்டோக்ஸின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். இங்கிலாந்து வீரர்களும் மதிப்பார்கள் என நினைக்கிறேன் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார்.
 

click me!