அவங்க 3 பேரையும் சேர்த்தே ஆடும் லெவனில் ஆடவைக்கலாம்.. சேவாக்கிற்கு அவரது சக வீரரின் பதிலடி

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 6:59 PM IST
Highlights

ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்  ஆகிய இருவருடன் இணைந்து தோனியையும் ஆடும் லெவனில் எடுக்க முடியாது என்று சேவாக் கூறியிருந்த நிலையில், மூவரையும் சேர்த்து அணியில் எடுப்பதற்கான ஐடியாவை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கொடுத்துள்ளார்.
 

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, இந்திய அணியிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இடம்பெறவில்லை. உலக கோப்பைக்கு பின்னர் தோனி கிரிக்கெட்டே ஆடவில்லை. 

இதற்கிடையே தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பராக இந்திய அணியால் உருவாக்கப்பட்ட ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பிவந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால், விக்கெட் கீப்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட ராகுல், சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். பேட்டிங்கிலும் அபாரமாக ஆடி அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைத்ததால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்படாமல், ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த தொடர்களிலும் அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்த ராகுல், விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார்.

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஹர்திக் பாண்டியாவும் அணிக்கு திரும்பியிருக்கிறார். ரிஷப் பண்ட்டும் புறக்கணிக்கப்படவில்லை. அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும் அணியில் இருக்கிறார். இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. 

இந்திய டி20 அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் நடக்குமா இல்லையா என்பது சந்தேகமாக இருந்தாலும், தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சேவாக், தோனி அணியில் சேர்த்தால் எந்த இடத்தில் யாருக்கு பதிலாக ஆடவைப்பது? ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே நன்றாக ஆடிவருகிறார்கள். அதிலும் ராகுல் சமீபத்தில் செம ஃபார்மில் அருமையாக ஆடிவருகிறார். அதனால் இவர்கள் இருவரில் ஒருவரை நீக்குவதற்கு காரணமே கிடையாது, அதனால் தோனிக்கு அணியில் இடமே கிடையாது என்று சேவாக் தெரிவித்திருந்தார். 

ஆனால் ராகுல், ரிஷப் பண்ட்டுடன் சேர்த்து தோனியையும் ஆடும் லெவனில் சேர்க்கமுடியும் என்று வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாசிம் ஜாஃபர், தோனி உடற்தகுதியுடனும் நல்ல ஃபார்மிலும் இருந்தால் கண்டிப்பாக அவரை அணியில் எடுக்க வேண்டும். அவரைத்தாண்டி ஒரு விக்கெட் கீப்பரை நினைத்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தோனி விக்கெட் கீப்பிங்கும் செய்யும்பட்சத்தில் ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பழு குறையும். அவர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தோனி பின்வரிசையில் பேட்டிங்கை பார்த்துக்கொள்வார். இடது கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்கலாம் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
 

click me!