#AUSvsIND அந்த பையனுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு..! விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம்

By karthikeyan VFirst Published Jan 8, 2021, 8:44 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் டெஸ்ட் போட்டியில் படுமட்டமாக சொதப்பியதையடுத்து, மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில். அந்த போட்டியில் நன்றாக ஆடி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்ற கில், சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்தார்.

ஆஸி., மண்ணில் அந்த அணிக்கு எதிராக, சவாலான கண்டிஷனில் மிகச்சிறப்பாக ஆடி தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே முதல் அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்தாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சரியாக ஐம்பது ரன்களில் ஆட்டமிழந்தாலும், நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து அவரது பணியை செவ்வனே செய்தார்.

இளம் வீரர் ஷுப்மன் கில்லின் பேட்டிங்கால் கவரப்பட்ட பல முன்னாள் ஜாம்பவான்களும் அவரை வெகுவாக பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், ஷுப்மன் கில்லுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில் குறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், தனது வெறும் 2வது டெஸ்ட் போட்டியிலேயே ஆடுகளத்தை சரியாக கணித்து மிகச்சிறப்பாக ஆடினார் ஷுப்மன் கில். அவரது தடுப்பாட்ட மற்றும் பாசிட்டிவ் அட்டாக் பேட்டிங், அவரது தெளிவு ஆகியவை அசரவைக்கின்றன. இந்திய கிரிக்கெட்டில் 3 விதமான போட்டிகளுக்கான அணியிலும் ஷுப்மன் கில்லுக்கு கண்டிப்பாக மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!