#ENGvsIND 3வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா? கேப்டன் கோலி பதில்

By karthikeyan VFirst Published Aug 24, 2021, 10:09 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.

எனவே 2வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி. 

லண்டன் லார்ட்ஸில் கண்டிஷனை கருத்தில்கொண்டே அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லையே தவிர, இல்லையென்றால் அவர் அந்த போட்டியில் ஆடியிருப்பார். நாளை ஹெடிங்லியில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடியே தீர வேண்டும் என்பதே முன்னாள் வீரர்கள் அனைவரின் கருத்து.

3வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து ஆடுகளங்கள் சர்ப்ரைஸாக உள்ளது. பிட்ச் பசுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அஷ்வின் விஷயத்தில் எது வேண்டுமானால் நடக்கலாம். நாங்கள் எப்போதுமே 12 வீரர்களை தேர்வு செய்து அறிவிப்போம். கடைசி நேரத்தில் கண்டிஷன் மற்றும் பிட்ச் ஆகியவற்றை பொறுத்து கடைசி நேரத்தில் ஆடும் லெவனை முடிவு செய்வோம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
 

click me!