என் ரத்தம் கொதித்தது.. வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் குறித்து 24 ஆண்டுகள் கழித்து மனம்திறந்த வெங்கடேஷ் பிரசாத்

By karthikeyan VFirst Published Jun 12, 2020, 7:27 PM IST
Highlights

1996 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அமீர் சொஹைலுடனான மோதல் மற்றும் அவரது ஸ்டம்ப்பை கழட்டிய சம்பவம் குறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார். 
 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றிக்காக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்கள். ஆட்ட ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் சில வீரர்களுக்கு இடையேயான மோதலும் நிகழும். 

அப்படி, காலத்தால் அழியாத, கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம் தான் 1996 உலக கோப்பையில் நடந்தது. வெங்கடேஷ் பிரசாத் - அமீர் சொஹைலுக்கு இடையேயான அந்த மோதலை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

1996 உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 287 ரன்களை குவித்து, 288 ரன்கள் என்ற கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சயீத் அன்வரும் அமீர் சொஹைலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

தொடக்க ஜோடியை ஸ்ரீநாத் பிரித்தார். அன்வரை 48 ரன்களில் ஸ்ரீநாத் வீழ்த்த, தொடக்க ஜோடி உடைந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானின் கை ஓங்கியிருந்ததால், ஆணவமிகுதியில் இருந்த அமீர் சொஹைல், வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிட்டு, பந்தை போய் பொறுக்கு போ என்கிற ரீதியாக, பிரசாத்தை நோக்கி பேட்டை காட்டி ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அமீர் சொஹைலை கிளீன் போல்டாக்கிய வெங்கடேஷ் பிரசாத், போடா போ என்று கையை அசைத்து ஆக்ரோஷமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், 248 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. 

அந்த போட்டியில் அமீர் சொஹைலுடனான மோதல் குறித்து வெங்கடேஷ் பிரசாத் இப்போது பேசியுள்ளார். அதுகுறித்து மனம் திறந்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், அந்த சம்பவம் நடந்த, இந்த 24 ஆண்டில் தினமும் என்னை பார்க்கும் யாராவது ஒருவராவது அந்த சம்பவத்தை பற்றி என்னிடம் கேட்டுவிடுவார்கள்.

அமீர் சொஹைல் பவுண்டரி அடித்துவிட்டு செய்த செய்கையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது. எனவே எனது ரத்தம் கொதித்தது. அந்த நேரத்தில் நமக்கு கண்டிப்பாக ஒரு விக்கெட் தேவைப்பட்டது. அதுதான் அந்த விக்கெட். விக்கெட்டை வீழ்த்திய பின்னரான எனது செய்கைக்கு, அபராதம் விதிக்கப்பட்டிருக்கும். நல்லவேளையாக, சச்சின், ஸ்ரீநாத், அசாருதீன் என்னை காப்பாற்றிவிட்டார்கள் என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். 
 

click me!