கேஎல் ராகுல் மீது எனக்கு எந்த வன்மமும் இல்ல.. நல்லதுக்குத்தான் சொல்றேன் - வெங்கடேஷ் பிரசாத் கருத்து

Published : Feb 19, 2023, 05:14 PM IST
கேஎல் ராகுல் மீது எனக்கு எந்த வன்மமும் இல்ல.. நல்லதுக்குத்தான் சொல்றேன் - வெங்கடேஷ் பிரசாத் கருத்து

சுருக்கம்

கேஎல் ராகுலை விமர்சிப்பதால் அவர் மீது தனிப்பட்ட வன்மம் இருப்பதாக அர்த்தமில்லை; அவரது நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி தேர்வு குறித்து ஒரு குழப்பம் தான் இருந்தது. அதாவது, இதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டைசதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கப்படுவாரா அல்லது கேஎல் ராகுல் இறக்கப்படுவாரா என்பதுதான் அந்த கேள்வி.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவர்தான் துணை கேப்டனும் கூட. அதனால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் முதல் போட்டியில்  ராகுல் சரியாக பேட்டிங் ஆடாமல் சொதப்பினார். 

ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

இதையடுத்து அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ராகுலை கடுமையாக விமர்சித்தது, முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தான். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியும் அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததே தவறு என்றும், ஷுப்மன் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலுக்கு தொடர் வாய்ப்பளிப்பதாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் ராகுல் வெறும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 2022லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். அதை சுட்டிக்காட்டி மீண்டும் மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

ராகுல் குறித்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், இந்தியாவின் 2வது சிறந்த தொடக்க வீரர் (ரோஹித்துக்கு அடுத்து) ராகுல் தான் என்று இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது. அவர் தான் நாட்டின் சிறந்த ஓபனர் என்று நினைக்கின்றனர். அவரது தேர்வு அநீதி. கடந்த 5 ஆண்டுகளில் 47 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 27. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது, இந்தியாவில் வேறு திறமைசாலிகளே இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய ராகுல் அதிலும் ஒரு ரன் மட்டுமே அடித்து சொதப்பினார். ராகுல் மீதான வெங்கடேஷ் பிரசாத்தின் கடுமையான விமர்சனங்கள், அவர் வன்மத்தை உமிழ்வதாக சில ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்து டுவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ள வெங்கடேஷ் பிரசாத், கேஎல் ராகுல் மீது எனக்கு ஏதோ தனிப்பட்ட வெறுப்பு என்று சிலர் நினைக்கின்றனர். கண்டிப்பாக அப்படி கிடையாது. அவருடைய நல்லதுக்காகத்தான் நான் கூறுகிறேன். இப்போதிருக்கும் ஃபார்மில் அவர் தொடர்ந்து விளையாடினால் அதுவே அவரது தன்னம்பிக்கையை குறைத்துவிடும். எனவே அவர் உள்நாட்டு போட்டிகளில் ஆடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை பிடிக்க வேண்டும். 

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! 2-0 என தொடரில் முன்னிலை

ரஞ்சி டிராபி முடிந்துவிட்டது. எனவே இனி இந்தியாவில் உள்நாட்டு போட்டிகளில் ஆடமுடியாது. எனவே புஜாராவை போல, இங்கிலாந்துக்கு சென்று கவுண்டி கிரிக்கெட்டில் ஆடி ஸ்கோர் செய்து தனது ஃபார்மை மீட்டெடுத்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும். ஆனால் ஐபிஎல்லை புறக்கணித்துவிட்டு கவுண்டி கிரிக்கெட்டில் அவர் ஆடுவதெல்லாம் சாத்தியமில்லாதது என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?