
ஐபிஎல் 15வது சீசனில் அடையாளம் காணப்பட்ட அரிதினும் அரிதான திறமை உம்ரான் மாலிக். காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், இர்ஃபான் பதானால் அடையாளம் காணப்பட்டு வளர்த்துவிடப்பட்ட வீரர்.
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய உம்ரான் மாலிக் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் சீசனின் அதிவேக பந்தாக இருந்தது. ஃபைனலில் லாக்கி ஃபெர்குசன் 157.3 கிமீ வேகத்தில் பந்துவீசி உம்ரானை முந்தினார்.
150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அல்லு தெறிக்கவிட்டார் உம்ரான் மாலிக். அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முந்தைய பயிற்சியில் 163.7 கிமீ வேகத்தில் பந்தை வீசி சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அக்தர் வீசிய ரெக்கார்டு அதிவேக பந்தான 161.3 கிமீ வேகத்தை விட இது அதிகம். ஆனாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
கட்டாக்கில் நாளை நடக்கும் 2வது டி20 போட்டியிலாவது உம்ரான் மாலிக்கிற்கு ஆடும் லெவனில் இடம் வழங்கவேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறியுள்ளனர். ரசிகர்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கிறது.
இந்நிலையில், 2வது டி20 போட்டிக்கு முந்தைய வலைப்பயிற்சியில் அதிவேகமாக பந்தை வீசி மிரட்டிவரும் உம்ரான் மாலிக், தனது அதிவேக பந்துவீச்சால் ரிஷப் பண்ட்டின் பேட்டை உடைத்தார். உம்ரான் மாலிக்கின் பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட்டின் பேட் உடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தன்னை ஆடும் லெவனில் அணி நிர்வாகம் தவிர்க்கவே முடியாத அளவிற்கு கட்டாயத்தை ஏற்படுத்திவருகிறார் உம்ரான் மாலிக்.