பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி அப்படி ஒன்றும் ஸ்பெஷல் கிடையாது..! அசால்ட்டா பேசி அதகளம் பண்ணும் கோலி

By karthikeyan VFirst Published Oct 17, 2021, 7:55 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். 
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. 

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

அதனால் வழக்கம்போலவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மற்ற போட்டிகளை போலத்தான் எப்போதுமே நான் அணுகுவேன். இந்த போட்டி எப்போதுமே அதிகம் மிகைப்படுத்தப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தான் அமோகமாக இருக்கும். அந்த அளவில் தான் இந்த போட்டி மற்ற போட்டிகளிலிருந்தே வித்தியாசப்படுகிறதே தவிர,  ஒரு கிரிக்கெட் வீரராக நான் மற்ற போட்டிகளை எப்படி அணுகுவேனோ, அதேபோலத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் அணுகுவேன் என்று விராட் கோலி கூறினார்.
 

click me!