எதிரணியின் மொத்த பேரும் சிங்கிள் டிஜிட்.. தமிழ்நாடு அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 14, 2019, 8:47 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் மணிப்பூர் அணி நிர்ணயித்த இலக்கை 5வது ஓவரிலேயே அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

சையத் முஷ்டாக் அலி தொடரில் முதல் போட்டியில் கேரளாவையும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, மூன்றாவது போட்டியில் உத்தர பிரதேசத்திடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இன்று மணிப்பூரை எதிர்கொண்டு ஆடியது தமிழ்நாடு அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மணிப்பூர் அணியின் அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு வீரர் கூட இரட்டை இலக்கத்தையே தொடவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால் அந்த அணி வெறும் 55 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

இதையடுத்து வெறும் 56 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜயும் வாஷிங்டன் சுந்தரும் இறங்கினர். அதிரடியாக ஆடிய முரளி விஜய் 14 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களை விளாசி ரன் அவுட்டானார். அவரது அதிரடியால் 4.1 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.

முரளி விஜய் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும்.

click me!