
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் பாதிப்பு கடுமையாகவே உள்ளது. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
மே 10 முதல் 24 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அதன்பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 24 முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் முனைப்பில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து விடுபட்டு எப்போது இயல்புநிலை திரும்பும் என்று தெரியவில்லை. எனவே தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரும் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 4 தொடங்கி ஜூலை 4 வரை தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அந்த தொடரின் சி.இ.ஓ பிரச்சன்ன கண்ணா தெரிவித்துள்ளார்.