தினேஷ் கார்த்திக்கின் மற்றுமொரு அதிரடி இன்னிங்ஸ்.. பவுலிங்கில் அசத்திய விஜய் சங்கர்.. தமிழ்நாடு அணிக்கு மிகப்பெரிய வெற்றி

By karthikeyan VFirst Published Nov 17, 2019, 1:02 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் விதர்பா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 
 

தமிழ்நாடு மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான போட்டி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி 20 ஓவரில் 168 ரன்களை குவித்தது. 

தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக வாஷிங்டன் சுந்தரும் முரளி விஜயும் களமிறங்கினர். இருவருமே சரியாக ஆடவில்லை. இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் பாபா அபரஜித்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 

தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆட, அபரஜித் நிதானமாக ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய தினேஷ் கார்த்திக் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். அபரஜித் 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களத்திற்கு வந்த விஜய் சங்கர் தன் பங்கிற்கு 17 பந்தில் 26 ரன்களை சேர்த்து கொடுத்தார். ஷாருக்கான் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். தமிழ்நாடு அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய விதர்பா அணியில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. 

விதர்பா வீரர்கள் சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கரின் பவுலிங்கில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 14.5 ஓவரில் வெறும் 55 ரன்களுக்கு விதர்பா அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து தமிழ்நாடு அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியின் சார்பில் சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

click me!