இலங்கை பவுலிங்கை அடித்து வெளுத்து டி20யில் 3வது சதமடித்தார் சூர்யகுமார் யாதவ்..! இலங்கைக்கு மிகக்கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jan 7, 2023, 8:50 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை அடித்து அசத்த, அவரது அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 228 ரன்களை குவித்த இந்திய அணி, 229 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற தொடர் 1-1 என சமனில் இருக்கும் நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். 

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி அதிரடியாக பேட்டிங் ஆடி 16 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நன்றாக அடித்து ஆடிய திரிபாதி முதல் அரைசதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போலவே மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு இலங்கையை தெறிக்கவிட்டார். மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், அதை நிரூபிக்கும் விதமாக அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்டு சதமடித்தார். தனது டிரேட்மார்க் ஷாட்டின் மூலம் ஸடம்ப்புக்கு பின்னால் சில சிக்ஸர்களை விளாசினார்.

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். 51 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அக்ஸர் படேல் 9 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்த இந்திய அணி, 229 ரன்கள் என்ற கடினமான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!