இந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..!

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 2:54 PM IST
Highlights

தொடர்ச்சியாக 3 கொரோனா பரிசோதனைகளின் முடிவு நெகட்டிவ் என்று வந்துவிட்டதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு பறக்கின்றனர்.
 

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினர்.

இதையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர். ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரனும் மெயின் அணியில் சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கை தொடரை முடித்துவிட்டு, அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கை தொடரில் ஆடிவந்த க்ருணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இலங்கைக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளிலும் ஆடவில்லை. அந்த தனிமைப்படுத்தப்பட்ட 8 வீரர்களில், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவும் அடக்கம்.

அதனால் அவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கருதப்பட்டது. இங்கிலாந்துக்குள் நுழையும் வெளிநாட்டவர்களில், இலங்கையை ரெட் லிஸ்ட்டில் சேர்த்து வைத்துள்ளது இங்கிலாந்து. எனவே இலங்கையிலிருந்து பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் செல்வதில் சிக்கல் இருந்தது. ஆனால் பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசி, பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவை இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்ல சிறப்பு அனுமதி பெற்றது.

ஆனால் கொரோனா நெறிமுறைகளின்படி, தொடர்ச்சியாக 3 கொரோனா பரிசோதனைகளின் முடிவு நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு செல்லமுடியும். குவாரண்டினை முடித்த அவர்கள் இருவருக்கும், தொடர்ச்சியாக 3 கொரோனா பரிசோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததையடுத்து, இன்னும் 24 மணி நேரத்தில் அவர்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்கின்றனர்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால், விசா கிடைப்பதில் தாமதமானது. வரும் 4ம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர்.

இங்கிலாந்துக்கு சென்றதும் அவர்கள் இருவரும் குவாரண்டினில் இருக்க வேண்டும். அதனால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் இருவருக்கும் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காது.
 

click me!