தான் ஆடியதிலேயே மிகக்கடினமான ஆடுகளம் சென்னை ஆடுகளம் தான் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் தலைமுறைக்கு முன்னோடி வீரர் கவாஸ்கர். 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,122 ரன்களையும், 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3,092 ரன்களையும் குவித்துள்ளார் கவாஸ்கர்.
ஆஸ்திரேலியாவில் பெர்த், சிட்னி, பிரிஸ்பேன் ஆடுகளங்கள், ஜமைக்கா, இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் உட்பட உலகின் அனைத்து கண்டிஷனிலும் முக்கியமான அனைத்து ஆடுகளங்களிலும் ஆடியவர் கவாஸ்கர்.
உலகின் சவாலான பல கண்டிஷன்களிலும், உலகம் முழுதும் உள்ள ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான மற்றும் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகின்ற பல ஆடுகளங்களில் ஆடியிருந்தாலும், தான் ஆடியதிலேயே மிகக்கடினமான ஆடுகளம் சென்னை தான் என்று தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், 1978ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சென்னையில் ஒரு போட்டியில் ஆடினேன். அதுதான் நான் ஆடியதிலேயே மிகக்கடினமான பிட்ச். பந்து பறந்துவரும் பெர்த், பிரிஸ்பேன் ஆடுகளங்களில் எல்லாம் ஆடியிருக்கிறேன். சிட்னியில் ஜெஃப் தாம்சனை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் வெஸ்ட் இண்டீஸின் சில்வெஸ்டர் க்ளார்க்கை எதிர்கொண்டதுதான் கடினமாக இருந்தது. எனவே நான் ஆடியதிலேயே கடினமான பிட்ச் சென்னை பிட்ச் தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.