இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த விரக்தியில், இலங்கை கேப்டன் ஷனாகாவும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும் களத்திலேயே மோதிக்கொண்டனர்.
ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ஷிகர் தவானின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது.
நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 193 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தீபக் சாஹரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் அவருக்கு புவனேஷ்வர் குமார் கொடுத்த ஒத்துழைப்பால் இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியில் தீபக் சாஹரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது இலங்கை அணி. தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வியடைந்த விரக்தியில், போட்டிக்கு பின்னர் களத்திற்குள் வந்த இலங்கை அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் ஷனாகாவிடம் ஏதே கூற, அதற்கு ஷனாகா ஆர்தரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசினார். இதையடுத்து ஷனாகாவிடம் கடுங்கோபமாக பேசிவிட்டு களத்தை விட்டு வெளியேறி ஓய்வறைக்கு சென்றார் மிக்கி ஆர்தர்.
இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா - பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இடையேயான வாக்குவாதம், இலங்கை அணியின் முதிர்ச்சியின்மையை காட்டும் விதமாக அமைந்தது. போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே, தோல்வியை நோக்கி செல்லச்செல்ல, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஓய்வறையில் அணி நிர்வாகத்தினரிடம் பயங்கர கோபமாக கத்திக்கொண்டிருந்தார்.
இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையேயான வாக்குவாதம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு, களத்தில் இந்த வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டு, ஓய்வறையில் மேற்கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மிக்கி ஆர்தர், ஷனாகாவுக்கும் எனக்கும் இடையேயான வாக்குவாதம் ஆரோக்கியமானது என்று பதிலளித்துள்ளார்.