ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் ஒரு காலை வைத்த இலங்கை..! தொடரை விட்டு வெளியேறியது இந்தியா

By karthikeyan VFirst Published Sep 6, 2022, 11:33 PM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, இலங்கையிடமும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. 

சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கையும், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவும் இன்றைய போட்டியில் மோதின. ஃபைனலுக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்தியா.

துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.

முதலில் பேட்டிங்  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்  கேஎல் ராகுல் 6 ரன்களுக்கு தீக்‌ஷனாவின் பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி ரன்னே அடிக்காமல் மதுஷங்காவின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஆனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின் அதிரடியை மேலும் கூட்டிய ரோஹித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 41 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். 

நன்றாக ஆடிய சூர்யகுமாரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா (17), ரிஷப் பண்ட் (17), தீபக் ஹூடா (3) ஆகிய மூவரும் மீண்டும் மிடில் ஆர்டரில் சொதப்ப, கடைசி ஓவரில் அஷ்வின் சிக்ஸர் அடித்து முடிக்க, 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது இந்திய அணி.

174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்கவீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 97 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த பதும் நிசாங்கா, சாஹல் வீசிய 12வது ஓவரில் 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் சாரித் அசலங்கா ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

தனுஷ்கா குணதிலகாவும் ஒரு ரன்னில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே (15வது ஓவர்) அரைசதம் அடித்த குசால் மெண்டிஸை 57 ரன்களுக்கு வீழ்த்தினார் சாஹல். 97 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய இலங்கை அணி, 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

இதையும் படிங்க - அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன் அபார பேட்டிங்.. முதல் ODI-யில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஆனால் அதன்பின்னர் தசுன் ஷனாகா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று இலக்கை அடித்து முடித்து போட்டியை முடித்தனர். கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 14 ரன்களை வழங்கினார். கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட, அர்ஷ்தீப் சிங் அந்த 7 ரன்களை எளிதாக வழங்காமல் டைட்டாக பந்துவீசினார். எனினும் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஃபைனலுக்கு கிட்டத்தட்ட முன்னேறிவிட்டது. இந்திய அணி ஆசிய கோப்பை ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரைவிட்டு வெளியேறியது. வரும் 8ம் தேதி இந்திய அணி ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஜெயித்தாலும் இந்திய அணிக்கு ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்பில்லை.
 

click me!