இந்திய அணிக்கு பிரேக் கொடுத்த அறிமுக பவுலர் சக்காரியா..! ஆனாலும் இலங்கை அணியின் வெற்றி உறுதி

Published : Jul 23, 2021, 10:13 PM IST
இந்திய அணிக்கு பிரேக் கொடுத்த அறிமுக பவுலர் சக்காரியா..! ஆனாலும் இலங்கை அணியின் வெற்றி உறுதி

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.  

இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, இன்று நடந்துவரும் 3வது போட்டியில், முதலிரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

அந்தவகையில், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம், சேத்தன் சக்காரியா ஆகிய 4 வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். கொழும்பில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 13 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடினார். பிரித்வி ஷாவும் சஞ்சு சாம்சனும் இணைந்து சிறப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்தனர். 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா. அவரைத்தொடர்ந்து சஞ்சு சாம்சனும் அரைசதத்தை தவறவிட்டு 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் மனீஷ் பாண்டேவும் களத்தில் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. 23 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்திருந்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு, மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடர்ந்தது.

மழைக்கு பின் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. மனீஷ் பாண்டே தான் வெற்றிகரமாக இந்த விக்கெட் வீழ்ச்சியை தொடங்கிவைத்தார். 19 பந்தில் 11 ரன் அடித்து மனீஷ் பாண்டே ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 19 ரன்னில் ஆட்டமிழந்து மற்றுமொரு ஏமாற்றினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 40 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நிதிஷ் ராணா(7), கிருஷ்ணப்பா கௌதம்(2), ராகுல் சாஹர்(13), நவ்தீப் சைனி(15) ஆகியோர் அடுத்தடுத்து மளமளவென ஆட்டமிழக்க, 225 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இந்திய அணி.

226 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இலங்கை அணி அபாரமாக ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர் மினோத் பானுகா 7 ரன்னில் கிருஷ்ணப்பா கௌதமின் பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்தார் ராஜபக்சா. இவர்கள் இருவரும் இணைந்து அபாரமாக ஆடிவருகின்றனர். அவிஷ்கா ஃபெர்னாண்டோ சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ராஜபக்சாவும் அரைசதம் அடித்தார்.

இருவருமே அரைசதம் அடித்தபின்னரும் தொடர்ந்து சிறப்பாக ஆடினர். களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்ட ஃபெர்னாண்டோ களத்தில் நிற்கும் நிலையில், ராஜபக்சா 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அறிமுக பவுலர் சேத்தன் சக்காரியாவின் பந்தில் 23வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

2வது விக்கெட்டுக்கு அவர்கள் 109 ரன்களை குவித்தனர். ராஜபக்சாவின் விக்கெட்டுக்கு பிறகு ஃபெர்னாண்டோவுடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்துள்ளார். ராஜபக்சாவின் விக்கெட்டை வீழ்த்தி அறிமுக பவுலர் சேத்தன் சக்காரியா பிரேக் கொடுத்தாலும், இலங்கை அணி 24 ஓவரில் 149  ரன்கள் அடித்திருக்கும் நிலையில் இன்னும் 23 ஓவரில் 77 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்த KKR... பிளேஆஃப் ரேஸில் கொல்கத்தா... அந்த 4வது இடம் யாருக்கு?
Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்