மொத்தமும் முடிஞ்சுது.. ஓவர்நைட்டில் அஸ்தமனமான கிரிக்கெட் கெரியர்.. அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 19, 2019, 2:58 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாது அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள சர்ஃபராஸ் அகமதுவின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டதாக அக்தர் கூறுகிறார். 

சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி, 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதுமட்டுமல்லாமல் டி20 தரவரிசையில் முதலிடத்திலும் இருந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக ஆடி, தொடர் தோல்விகளை சந்தித்தது. 

உலக கோப்பையில் தோற்றது மட்டுமல்லாமல், சொந்த மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பின் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணி, அது நம்பர் 1 இடத்தில் இருக்கும் டி20 ஃபார்மட்டில் இலங்கையிடம் ஒயிட்வாஷ் ஆனது, அந்த அணிக்கு மரண அடியாக விழுந்தது. 

சர்ஃபராஸ் அகமது கேப்டனாகவும் சரியாக செயல்பட முடியாமல், பேட்ஸ்மேனாகவும் சோபிக்க முடியாமல், ரெண்டுங்கெட்டானாக திணறினார். கேப்டன்சி நெருக்கடி அவரது பேட்டிங்கையும் பாதித்தது. அதனால் அவர் இரண்டிலுமே சொதப்பினார். அந்த நெருக்கடியை கையாள முடியாமல் நிராயுதபாணியாக நின்றார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு, டெஸ்ட் அணிக்கு அசார் அலியும் டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டன்சியில் இருந்து மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய தொடருக்கான, பாகிஸ்தான் அணியிலிருந்தே சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ஃபராஸ் அகமதுவை கடுமையாக விமர்சித்துவரும் அக்தர், சர்ஃபராஸ் அகமதுவின் கெரியர் இத்துடன் முடிந்துவிட்டதாக கருதுகிறார். 

தனது யூடியூப் சேனலில் சர்ஃபராஸ் குறித்து பேசியுள்ள அக்தர், சர்ஃபராஸ் அகமதுவுக்கு இது கெட்ட செய்தி. அவர் நன்றாக ஆடி அணியில் தனக்கான இடத்தை பிடித்தார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு(2017) பிறகு அனைத்து வகையிலும் சொதப்பினார். நாமெல்லாம் பழைய சர்ஃபராஸை தேடிக்கொண்டிருந்தோம். ஆனால் அவரோ கடந்த இரண்டு ஆண்டுகளாக பயந்து நடுங்கினார். அவர் கூடுதல் பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காக நாம் பேசியதை எல்லாம், அவரை புறக்கணிக்கப்பதாக அவர் எடுத்துக்கொண்டார். 

சர்ஃபராஸ் அகமது கேப்டன்சியிலிருந்தும் அணியிலிருந்தும் நீக்கப்பட்டதற்கு, அவரேதான் பொறுப்பு. தன் மீது தான் அவர் பழிபோட்டுக்கொள்ள வேண்டும். தனது பேட்டிங் ஆர்டர் குறித்து சுய முடிவு எடுத்திருக்க வேண்டும். தைரியமாக முன்வரிசையில் பேட்டிங் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல், தற்போது அனைத்து விதமான அணிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் இனிமேல் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 
 

click me!