IPL 2022: ஏன்டா நாக் அவுட்டுக்கு போகல.? ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published May 27, 2022, 2:50 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனின் பிளே ஆஃபிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறாததற்காக அந்த அணியில் ஆடிய தனது மகனும் சீனியர் கிரிக்கெட் வீரருமான ஷிகர் தவானை அவரது தந்தை அடி வெளுத்து வாங்கிவிட்டார். அந்தவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. எனவே இன்று நடக்கும் 2வது தகுதிப்போட்டியில், முதல் தகுதிப்போட்டியில் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸும், எலிமினேட்டரில் ஜெயித்த ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இதில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளும்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பிருந்தும், அந்த அணிகள் முன்னேறவில்லை. மயன்க் அகர்வால் தலைமையில் களம்கண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகள், 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6ம் இடத்தை பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

2016லிருந்து அனைத்து சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்துவந்த ஷிகர் தவான், இந்த சீசனில் 500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவில்லை என்றாலும், நன்றாக ஆடி 460 ரன்களை குவித்தார்.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறாத நிலையில், அந்த அணியில் ஆடிய ஷிகர் தவானை அவரது தந்தை, ஒழுங்காக ஆடி அணியை பிளே ஆஃபிற்கு அழைத்து செல்லாததற்காக அடித்து உதைத்தார். ஷிகர் தவான் கீழே விழுந்த பிறகும், அவரை காலால் உதைத்தார். அவரது குடும்பத்தினர் தடுக்க முயன்றும் முடியவில்லை. 

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஷிகர் தவான், நாக் அவுட்டுக்கு முன்னேறாததால் என் தந்தையால் நாக் அவுட் செய்யப்பட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
 

click me!