
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மேட்ச் வின்னிங் சதம் அடித்த கையோடு, இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருதை சஞ்சு வென்றுள்ளார். டி20 உலகக்கோப்பையை இந்திய அணி தக்கவைத்த தொடரில், சஞ்சு வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான போட்டியில், சக வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் கானர் எஸ்டர்ஹூயிசன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சஞ்சு சாம்சன் இந்த விருதை தட்டிச் சென்றார்.
உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஃபார்மில் இருந்த சஞ்சு, விளையாடிய ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் குவித்தார். குரூப் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடியபோதும், தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சூப்பர் 8 சுற்றிலிருந்து 80.25 என்ற நம்பமுடியாத பேட்டிங் சராசரியை சஞ்சு வைத்திருந்தார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டி, கிட்டத்தட்ட ஒரு கால் இறுதிப் போட்டி போல அமைந்தது. அதில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவின் வெற்றியையும் அரையிறுதி வாய்ப்பையும் சஞ்சு உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து, வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்களும் எடுத்து அணியின் டாப் ஸ்கோரராக ஜொலித்தார்.
"ஐசிசி-யின் இந்த விருதை வென்றது நம்ப முடியாத உணர்வைத் தருகிறது. என் கிரிக்கெட் பயணத்தில் இது மிகவும் மறக்க முடியாத ஒரு காலகட்டம். இந்த நேரத்தில் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது," என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் பிளேயிங் லெவனில் சஞ்சுவுக்கு இடம் கிடைக்கவில்லை. அபிஷேக் ஷர்மா தொடர்ந்து சொதப்பியதால், சூப்பர் 8 சுற்றில் அவர் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஜிம்பாப்வேக்கு எதிராக 24 ரன்களுடன் தொடங்கிய சஞ்சு, அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசினார்.