இந்த பையனை எப்படி டி20 உலக கோப்பை டீம்ல எடுத்தீங்க? பதில் சொல்லியே தீரணும்.. தெறிக்கவிடும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Oct 29, 2021, 3:57 PM IST
Highlights

முழு ஃபிட்னெஸுடன் இல்லாத ஹர்திக் பாண்டியாவை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்தது எப்படி என்பது குறித்து தேர்வாளர்கள் விளக்கமளித்தே தீர வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை.

டி20 உலக கோப்பையில் அவர் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில்  பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் தோள்பட்டையில் காயமடைந்த பாண்டியா, 2வது இன்னிங்ஸில் களத்திற்கே வரவில்லை.

அவர் பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் 6வது பவுலிங் ஆப்சன். ஆனால் அவர் பந்துவீசாததால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடுவதால், 6வது பவுலிங் ஆப்சன் கிடையாது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் பந்துவீசியாக வேண்டும். அப்படி வீசவில்லை என்றால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது அவசியமற்றது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஹர்திக் பாண்டியாவை ஆடவைப்பது அணி காம்பினேஷனை பாதிக்கும். அந்த பாதிப்பைத்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அனுபவித்தது இந்தியா.

எனவே ஹர்திக் பாண்டியா பந்துவீசாத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக, அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் வகையில் வேறு வீரரை ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் வலியுறுத்திவருகின்றனர். அவர் பந்துவீசவில்லை என்றால் அணியில் அவரை எடுக்கக்கூடாது என்று பலர் வலியுறுத்திவரும் நிலையில், அவர் முழு ஃபிட்னெஸுடன் இல்லை என்றால், அவரை அணியில் எடுத்திருக்கவே கூடாது என்று முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சந்தீப் பாட்டீல், ஹர்திக் பாண்டியாவை ஆடும் லெவனில் எடுத்தது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவு. இந்த விவகாரத்தில் பிசிசிஐக்கு மட்டும்தான் உண்மை என்னவென்று தெரியும். ஆனால் அடிப்படையில், ஒரு வீரர் முழு ஃபிட்னெஸுடன் இல்லை என்றால், அவரை தேர்வாளர்கள் எப்படி அணியில் எடுத்தார்கள்? ஐபிஎல் முழுவதும் பந்துவீசாத ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுப்பதற்கு முன், அவரது ஃபிட்னெஸை நிரூபிக்க அல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஃபிட்னெஸை நிரூபித்த பின்னர் தானே அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக தேர்வாளர்களோ அல்லது வேறு யாராவதோ பதில் சொல்லியே தீர வேண்டும். ஏனெனில் நீங்கள் தேர்வு செய்த அணி ஏதோ ஒரு சாதாரண தொடருக்கானது அல்ல; உலக கோப்பைக்கானது. எனவே பாண்டியாவின் தேர்வு குறித்து பதில் சொல்லியாக வேண்டும் என்று சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 

click me!