
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக 1989ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களையும் 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18,426 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை விராட் கோலி தான் தற்போது ஒவ்வொன்றாக தகர்த்துவருகிறார்.
முந்தைய தலைமுறையில் சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்த நிலையில், இந்த தலைமுறையின் சிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். லெஜண்ட் கிரிக்கெட்டரான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் அளவிற்கு வளர்ந்தது மட்டுமல்லாது, இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்வி எழுப்புமளவிற்கு வளர்ந்துள்ளார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அமெரிக்க நிருபர் ஒருவரிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியுடனான நெகிழ்ச்சியான, உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது கடைசி நாள் ஆட்டத்தின்போது, இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடமுடியாது என்ற நிதர்சனத்தை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொண்டு ஓய்வறையில் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த விராட் கோலி என்னிடம் வந்து, ஒரு கயிறை பரிசாக கொடுத்தார். கோலியின் தந்தை அவரது நினைவாக கோலிக்கு கொடுத்த புனித கயிறு அது. கோலியின் தந்தை அவருக்கு கொடுத்த அந்த கயிறை எனக்கு பரிசாக கொடுத்தார் கோலி. அதை கொஞ்ச நேரம் வைத்துக்கொண்ட நான், அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டேன். இது உனக்கானது(கோலிக்கானது). இதை உன் கடைசி மூச்சு உள்ளவரை நீ பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அதை கோலியிடமே திருப்பி கொடுத்துவிட்டேன். அது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.