இதுமட்டும் நடந்தால், ரெய்னாவை மீண்டும் இந்திய அணியில் பார்க்கலாம்..! ஆர்பி சிங் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 23, 2020, 6:56 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு முடிவு மற்றும் அவர் அந்த முடிவை திரும்பப்பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவை குறித்து ஆர்பி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவித்தார். 33 வயதே ஆன ரெய்னாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. 

2005ம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா, அதன்பின்னர் தோனியின் கேப்டன்சியில் அவரது ஆஸ்தான வீரராகவும் நெருங்கிய நண்பராகவும் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ஜொலித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரெய்னா சோபிக்காததால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார். 

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களையும் 78 டி20 போட்டிகளில் ஆடி 1605 ரன்களையும் விளாசியுள்ளார். வெறும் 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ரெய்னா நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவரான ஜாண்டி ரோட்ஸுக்கே மிகவும் பிடித்த ஃபீல்டர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவராஜ் சிங், கைஃப் ஆகியோர் செட் செய்திருந்த இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர் ரெய்னா. 2011 ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ரெய்னாவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கே சென்றது. 

ரெய்னா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவந்த நிலையில், 2015-2016 காலக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. 2018ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து தொடரில் ஆடிய ரெய்னா, அதில் சரியாக ஆடாததால் மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்திய அணியில் தனக்கான இடத்தை எதிர்நோக்கியே இருந்தார் ரெய்னா. லாக்டவுனில் கூட இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் தருணத்திற்காக காத்திருப்பதாக கூறியிருந்த நிலையில், திடீரென ஓய்வறிவித்தது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களுக்கே அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில், ரெய்னாவின் ஓய்வு மற்றும் கம்பேக் சான்ஸ் குறித்து, அவருடன் இளம் வயதிலிருந்தே உத்தர பிரதேச மாநில அணியில் இணைந்து ஆடிய ஆர்பி சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஆர்பி சிங், ரெய்னாவுடன் சிறுவயதிலிருந்து நான் ஆடியிருக்கிறேன். ரெய்னா சீக்கிரமாக ஓய்வுபெற்றுவிட்டார் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் அவரது ஃபிட்னெஸ் மற்றும் இந்திய அணியில் அவருக்கு இருக்கும் கம்பேக் வாய்ப்பு ஆகியவற்றை எல்லாம் பரிசீலித்துவிட்டுத்தான் ரெய்னா ஓய்வு முடிவை அறிவித்திருப்பார்.

ஐபிஎல்லில் ஒருவேளை ரெய்னா 1000 ரன்களை குவித்தால், ஓய்வு முடிவை திரும்பப்பெற கூட வாய்ப்புள்ளது. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.. யாருக்கு தெரியும்..? அல்லது யுவராஜ் சிங்கை போல வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ரெய்னா ஆடலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கும். ரெய்னா சீக்கிரம் ஓய்வுபெற்றுவிட்டார் என்பதைவிட திடீரென ஓய்வு அறிவித்ததுதான் அனைவருக்கும் அதிர்ச்சி. அவர் அண்மையில் கூட இந்திய அணியில் மீண்டு கம்பேக் வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென ஓய்வு அறிவித்துவிட்டார் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!