கோலி ஏதாவது சொல்வாரு.. அப்படிலாம் வீரர்களை தேர்வு செய்ய முடியாதுங்க.. ரோஹித் சர்மா அதிரடி

By karthikeyan VFirst Published Apr 5, 2019, 10:23 AM IST
Highlights

உலக கோப்பைக்கான இந்திய அணி ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்கள் மட்டும் உறுதி செய்யப்பட வேண்டும். 

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகியவை வலுவாக உள்ளது. தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் 5ம் வரிசையும் பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் நன்றாகவே ஆடிவருகிறார். ஆனால் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டு இடங்களும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதேபோல நான்காவது ஃபாஸ்ட் பவுலரும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. 

ராயுடு நன்றாக ஆடிவந்த நிலையில், திடீரென தொடர்ச்சியாக சொதப்பியதால் அவர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிவருகிறார். விஜய் சங்கர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. 

உலக கோப்பைக்கான இந்திய அணி ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்கள் மட்டும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த தகவலை ஏற்கனவே கேப்டன் விராட் கோலியே தெரிவித்துள்ளார். அந்த ஒன்றிரண்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவதை வைத்து தேர்வு செய்யப்படலாம் என்று கோலி தெரிவித்திருந்தார்.

ஆனால் ஐபிஎல்லில் ஆடுவதன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய முடியாது என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா, கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைய ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளோம். வீரர்கள் போதுமான ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளதால் வீரர்களின் ஆட்டத்திறனை அந்த போட்டிகளில் ஆடியதை வைத்து தேர்வுக்குழு மதிப்பீடு செய்திருக்கும். சில வீரர்கள் ஐபிஎல்லில் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கலாமே தவிர, ஐபிஎல்லில் ஆடுவதன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய முடியாது. ஒருநாள் போட்டிக்கு டி20 போட்டியில் ஆடுவதன் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது. அதுவும் ஐபிஎல்லில் ஆடுவதை வைத்து சுத்தமாக முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில் வீரர்கள் ஆடியதன் அடிப்படையில்தான் உலக கோப்பை அணீ தேர்வு இருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 

click me!