
உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகியவை வலுவாக உள்ளது. தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் 5ம் வரிசையும் பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் நன்றாகவே ஆடிவருகிறார். ஆனால் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டு இடங்களும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதேபோல நான்காவது ஃபாஸ்ட் பவுலரும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
ராயுடு நன்றாக ஆடிவந்த நிலையில், திடீரென தொடர்ச்சியாக சொதப்பியதால் அவர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிவருகிறார். விஜய் சங்கர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் வீரர்கள் ஆடிவருகின்றனர். குறிப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் ரிஷப் பண்ட், பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு விக்கெட் கீப்பிங்கிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக இருப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் கங்குலியும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான கருத்து. ஐபிஎல்லில் அவர் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். முதலில் ஐபிஎல்லில் கவனம் செலுத்தி ஸ்கோர் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உலக கோப்பை அணியில் அவருக்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.