
2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. அந்த பிரச்னையால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேரன் லீமன் விலகிய பின்னர், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார் ஜஸ்டின் லாங்கர்.
மிகவும் நெருக்கடியான நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஜஸ்டின் லாங்கர், 2 புதிய கேப்டன்களின் கீழ் ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் அணிகளை கட்டமைத்து அந்த அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்.
ஜஸ்டின் லாங்கர் பயிற்சியின் கீழ் ஆரோன் ஃபின்ச் தலைமையில் வெள்ளைப்பந்து அணிகளும், டிம் பெய்ன் தலைமையில் டெஸ்ட் அணியும் சிறப்பாக செயல்பட்டது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2 முறை டெஸ்ட் தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதுமட்டும்தான் ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வாங்கிய மரண அடி.
ஆனாலும் அந்த தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து, டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்றது.
ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் 2 மிகப்பெரிய தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்தபின்னர், நீண்டகாலத்திற்கு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறைந்த காலத்திற்கே நீட்டிக்க தீர்மானித்தது. அதனால் அதிருப்தியடைந்த ஜஸ்டின் லாங்கர், திடீரென பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இன்று சோகமான நாள். கடந்த 6 மாதங்களாக எதுவுமே சரியாக அமையவில்லை. ஜஸ்டின் லாங்கர், டிம் பெய்ன் விவகாரங்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கையாண்ட விதம் சங்கடமளிக்கிறது. லாங்கர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்கு இப்படித்தான் நடக்கும் என முன்பே உணர்ந்தேன் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.