
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததுமே, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட்கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை ஜெயிக்கவில்லை. அதுவே அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பெரிய ஸ்கோர் எதுவும் செய்யாத நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சி, ஆர்சிபி கேப்டன்சி என அவர் வகித்த அனைத்து கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஐபிஎல் 15வது சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார். எனவே ஐபிஎல் 15வது சீசனில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணி, ஏலத்தில் டுப்ளெசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய கேப்டன்சிக்கான வீரர்களை எடுத்தது.
இவர்களில் ஃபாஃப் டுப்ளெசிஸ் - க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டுப்ளெசிஸை ஆர்சிபி அணி கேப்டனாக நியமித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டுப்ளெசிஸ், கேப்டன்சியில் அதிக அனுபவம் வாய்ந்தவர். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக பல ஆண்டுகள் திகழ்ந்தவர் என்பதால், அவரது நியமனம் ஆர்சிபி அணிக்கு பலம் சேர்க்கும்.