IND vs NZ டெஸ்ட்: அம்பயர் நிதின் மேனனுடன் அஷ்வின் கடும் வாக்குவாதம்..! நடந்தது இதுதான்

By karthikeyan VFirst Published Nov 27, 2021, 7:37 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டத்தில் அம்பயர் நிதின் மேனனுடன் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி கான்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. 

இந்திய அணியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக பேட்டிங் ஆடி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 105 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில் (52) மற்றும் ஜடேஜா (50) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் 38 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது.

முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை யங்கும் டாம் லேதமும் தொடர்ந்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், வில் யங்கை 89 ரன்களில் வீழ்த்தி அஷ்வின் பிரேக் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனை 18 ரன்னில் உமேஷ் யாதவ் வீழ்த்த, சீனியர் வீரரான ரோஸ் டெய்லரை 11 ரன்னில் வீழ்த்திய அக்ஸர் படேல், ஹென்ரி நிகோல்ஸை வெறும் 2 ரன்னில் வெளியேற்றினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதத்தை நெருங்கிய டாம் லேதமையும் அக்ஸர் படேல் தான் வீழ்த்தினார். டாம் லேதமை சதமடிக்க விடாமல் 95 ரன்னில் வீழ்த்தினார் அக்ஸர் படேல். இதையடுத்து ராச்சின் ரவீந்திராவை 13 ரன்னில் ஜடேஜா போல்டாக்கி அனுப்ப,  டாம் பிளண்டெல் (13) மற்றும் சௌதி (5) ஆகிய இருவரையும் அக்ஸர் படேல் அவுட்டாக்கினார். கடைசி 2 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்த, 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.

49 ரன்கள்  முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2வது ஓவரிலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் அடித்துள்ளது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்த அஷ்வின், விக்கெட் தேவை என்ற கட்டாயத்தில் வழக்கம்போலவே நிறைய விஷயங்களை முயற்சி செய்தார். அவற்றில் ஒன்றாக, பந்துவீசும்போது ஸ்டம்ப்பை ஒட்டிச்சென்று ஓடி பந்துவீசினார். அவர் பிட்ச்சின் டேஞ்சர் ஏரியாவில் ஓடவில்லை என்றாலும், அவர் அம்பயருக்கு நேராக சென்று பந்துவீசியதால், அம்பயரால் சரியாக பார்க்கமுடியவில்லை.

இதையடுத்து ஸ்டம்ப்புக்கு நேராக சென்று பந்துவீசாமல் ஓரமாக சென்று வீசுமாறு அம்பயர் நிதின் மேனன் வலியுறுத்த, அஷ்வின் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸின்ன் 73வது ஓவரில் நடந்த அந்த வாக்குவாதம் இதோ..

அம்பயர் : நீங்கள் (அஷ்வின்) என் பார்வையை தடை செய்கிறீர்கள்.

ரஹானே : அவர் (அஷ்வின்) டேஞ்சர் ஏரியாவில் ஓடவில்லையே!

அம்பயர் : என்னால் சரியாக பார்க்கமுடியாததால் எல்பிடபிள்யூ தொடர்பான முடிவுகளை எடுக்க முடியவில்லை.

அஷ்வின் : நீங்கள் எப்படியும் எதையும் செய்யப்போவதில்லை.

இவ்வாறாக தொடர்ந்த அந்த வாக்குவாதம் 3 ஓவர்களுக்கு நீடித்தது.
 

click me!