தோனி குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாஸ்திரி

By karthikeyan VFirst Published Nov 26, 2019, 4:08 PM IST
Highlights

தோனி மீண்டும் இந்திய அணியில் எடுக்கப்படுவாரா? அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவாரா என்பன போன்ற கேள்விகளுக்கும் இதுகுறித்த விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுங்கினார். 

இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். 

அதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்படும் முன், தோனியுடனான தனது ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கேப்டன் கோலி டுவீட் செய்வதால், தோனி அணியில் இடம்பெறுவாரோ என்ற சந்தேகமும் விவாதமும் எழுந்துவிடுகிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில், தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவாரா? டி20 உலக கோப்பையில் ஆடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி பெரிய தொடர் ஐபிஎல் தான். எனவே ஐபிஎல்லில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்தும், ஐபிஎல்லில் மற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தும்தான் தோனி அணியில் எடுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் முடிவு செய்யப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 
 

click me!