ரஞ்சி தொடரை இருகட்டங்களாக நடத்தும் பிசிசிஐயின் திட்டம், இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பையே முறிக்கும் செயல் என்று ரவி சாஸ்திரி சாடியுள்ளார்.
முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இம்முறை ரஞ்சி தொடரை ரத்து செய்ய பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் எதிர்ப்புகள் கிளம்ப, ரஞ்சி தொடரை நடத்துவது குறித்த பிசிசிஐ ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர், ரஞ்சி தொடரை 2 கட்டங்களாக நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். லீக் போட்டிகளை முதலில் நடத்திவிட்டு, பின்னர் நாக் அவுட் போட்டிகளை ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் ரஞ்சி தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து இதில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
ஏற்கனவே ஐபிஎல்லால், ரஞ்சி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களுக்கான முக்கியத்துவமும், அதில் ஆடும் உள்நாட்டு வீரர்களுக்கான மதிப்பும் குறைந்துவிட்டது என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில், ரஞ்சி தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து டுவீட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரஞ்சி கோப்பை தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு. அதை அலட்சியப்படுத்தினால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பற்றதாகிவிடும் என்று ரவி சாஸ்திரி சாடியுள்ளார்.
The Ranji Trophy is the backbone of Indian cricket. The moment you start ignoring it our cricket will be SPINELESS!
— Ravi Shastri (@RaviShastriOfc)