#IPL2021 நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published Aug 22, 2021, 10:10 PM IST
Highlights

நட்சத்திர வீரர்கள் அனைவருமே விலகியதையடுத்து, கட்டாயத்தின் பேரில் நியூசிலாந்தின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான க்ளென் ஃபிலிப்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அதற்காக, முதல் அணியாக அமீரகம் சென்றடைந்த சிஎஸ்கே, அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. மற்ற அணிகளும் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளன.

வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஆடாததால், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் அந்த அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். வெளிநாட்டு வீரர்கள் விலகியதால் கடும் பாதிப்பை சந்தித்திருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரும் ஏற்கனவே ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய நிலையில், ஜோஸ் பட்லரும் விலகினார். ஜோஸ் பட்லருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. 

எனவே வெளிநாட்டு அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருவர் தேவை என்பதால், நியூசிலாந்தின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான க்ளென் ஃபிலிப்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

க்ளென் ஃபிலிப்ஸ் 25 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 506 ரன்களை 149.70 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளார். அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான க்ளென் ஃபிலிப்ஸின் தேர்வு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பலனளிக்கும் விதமான நல்ல தேர்வு.
 

click me!