
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதையடுத்து, தொடர் 2-2 என சமனடைந்தது.
தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஆடவில்லை. அதனால் கேஷவ் மஹராஜ் கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரின் 5 போட்டிகளிலும் ரிஷப் பண்ட் டாஸ் தோற்றார்.
இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ட்வைன் பிரிட்டோரியஸ், ரபாடா, கேஷவ் மஹராஜ் (கேப்டன்), லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.
7 மணிக்கு ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் பெங்களூருவில் மழை பெய்ததால் ஆட்டம் 50 நிமிடம் தாமதமாக 7.50க்கு தொடங்கப்பட்டது. முதல் ஓவரை கேஷவ் மஹராஜ் வீச, அந்த ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர்களை விளாச, முதல் ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. லுங்கி இங்கிடி வீசிய 2வது ஓவரில் இஷான் கிஷன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிடியின் அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 4வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 27 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
3.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 28 ரன்கள் அடித்திருந்த நிலையில், மறுபடியும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டன் ரிஷப்பும் களத்தில் உள்ளனர்.