என் ரெக்கார்டு செமயா இருந்துச்சு; ஆனாலும் என்னை டீம்ல இருந்து தூக்கிட்டாங்க.! சீனியர் வீரர் வேதனை

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 4:50 PM IST
Highlights

தன்னை ஒருநாள் அணியிலிருந்து நீக்குவதற்கு முன், தனது ரெக்கார்டு சிறப்பாக இருந்ததாகவும், தான் மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார்.
 

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகாலத்தின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு நிகரான புகழ், பெருமையுடன் திகழ்வதற்கான திறமையும் தகுதியும் இருக்கும் வீரர் அஜிங்க்யா ரஹானே. ஆனால் அவர் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தரமான பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர். பேட்டிங்கில் எந்த ஆர்டரிலும் இறங்கி, சூழலுக்கு ஏற்றவாறு தாக்குதல் மற்றும் தடுப்பு ஆகிய இரண்டுவிதமான ஆட்டத்தையும் ஆடக்கூடியவர் ரஹானே. 

ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் அதிக சராசரியை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவை விட வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக சராசரியை வைத்திருப்பவர் ரஹானே. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோஹித், கோலி ஆகியோரை விட சிறப்பாக ஆடியிருப்பவர் ரஹானே. 

டெஸ்ட்டில் மட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளிலும் ரஹானே நன்றாகத்தான் ஆடிவந்தார். இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2962 ரன்கள் அடித்துள்ளார். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்கி சிறப்பாக ஆடுபவர் ரஹானே. 

நான்காம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே, திடீரென 2018ம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பைக்கு(2019) ஓராண்டு இருந்த நிலையில், திடீரென ரஹானேவை ஓரங்கட்டிவிட்டு, நான்காம் வரிசை வீரரை தேடும் பணியில் இறங்கியது இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும். சரியான நான்காம் வரிசை வீரரை 2019 உலக கோப்பைக்கு முன்பு தேர்வு செய்து அந்த இடத்தை நிரப்பாததால், உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி. 

ரஹானே அருமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவருக்கு அதன்பின்னர் ஒருநாள் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரை நிரப்பிவிட்டனர். அதனால் இனிமேல் ரஹானேவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 

ஆனால், தான் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாக ரஹானே வேதனை தெரிவித்துள்ளார். ரஹானே 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெறவேயில்லை. அதற்கு முந்தைய ஆண்டு 2017ல் மொத்தம் 12 ஒருநாள் போட்டிகளில் 48.83 என்ற சராசரியுடன் 586 ரன்களை குவித்திருந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அவரை நீக்கிய இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் அதன்பின்னர் அவருக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே கொடுக்கவில்லை. 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் கூட தனக்கான இடத்திற்காக காத்திருந்தார் ரஹானே. ஆனால் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. விஜய் சங்கர் காயத்தால் விலகிய பின்னர் கூட, அப்போது இங்கிலாந்தில் கவுண்டி ஆடிக்கொண்டிருந்த ரஹானே அழைக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் தனக்கான இடத்திற்காக காத்திருக்கும் ரஹானே, இந்த ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடும் நிலையில், இந்த சீசனில் சிறப்பாக ஆடி மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளார். 

இந்நிலையில், தான் ஓரங்கட்டப்பட்டது குறித்தும் தனது கம்பேக் சான்ஸ் குறித்தும் பேசியுள்ள ரஹானே, நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மீண்டும் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவதற்கு முந்தைய எனது ரெக்கார்டு சிறப்பாக இருந்தது. ஆனாலும் நான் ஓரங்கட்டப்பட்டேன். எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரியை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். நான் ஓரங்கட்டப்படுவதற்கு முன், ஒருநாள் கிரிக்கெட்டில் எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரி ஆகியவை மிகச்சிறப்பாகவே இருந்தது. என்னை பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 

உலக கோப்பையில் நான்காம் வரிசையில் ஆட எனக்கு அழைப்பு வரும் என்றே நினைத்தேன். ஆனால் புறக்கணிக்கப்பட்டேன். அதுகுறித்தெல்லாம் பேசி பிரயோஜனமில்லை. எல்லாருக்குமே உலக கோப்பையில் ஆட வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருக்கும்; எனக்கும் அப்படித்தான். ஆனால் நான் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ரஹானே தெரிவித்துள்ளார்.
 

click me!