அம்பயர் அவுட் கொடுக்கலைனாலும் அது அவுட்டுதான்.. தானாக வெளியேறிய டி காக்..! பாராட்டி அனுப்பிய சந்தீப் ஷர்மா

By karthikeyan VFirst Published Apr 29, 2022, 10:03 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக் மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட விதம் அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் குயிண்டன் டி காக்(46) மற்றும் தீபக் ஹூடா(34) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. கேஎல் ராகுல் (6), க்ருணல் பாண்டியா(7), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(1), ஆயுஷ் பதோனி(4), ஜேசன் ஹோல்டர் (11) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் துஷ்மந்தா சமீராவும் மோசின் கானும் இணைந்து 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது லக்னோ அணி. 154 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டிவருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்த போட்டியில் ராகுல் விக்கெட்டுக்கு பிறகு நன்றாக ஆடிக்கொண்டிருந்த டி காக் அரைசதத்தை நெருங்கியநிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சந்தீப் ஷர்மா வீசிய இன்னிங்ஸின் 13வது ஓவரின் 4வது பந்து டி காக்கின் பேட்டை உரசிவிட்டு சென்ற நிலையில், அந்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் பிடித்துவிட்டார். அதற்கு சந்தீப் ஷர்மா அப்பீல் செய்ய, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பஞ்சாப் அணி ரிவியூவை பற்றி யோசிக்கக்கூட ஆரம்பிக்கவில்லை. 

ஆனால் டி காக் நேர்மையாக நடந்துகொண்டார். அது பேட்டில் பட்டது என்பதால் அம்பயர் அவுட் கொடுக்காதபோதும், உடனடியாக எதைப்பற்றியும் யோசிக்காமல் நடையை கட்டினார் டி காக். டி காக்கின் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்து அவரது முதுகில் தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தார் பவுலர் சந்தீப் ஷர்மா. டி காக்கின் நேர்மை மற்றும் சந்தீப் ஷர்மாவின் ரியாக்‌ஷன் ஆகிய இரண்டுமே பார்க்க அருமையாக இருந்தது. டி காக்கின் நேர்மையை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.
 

click me!