அவர விடவா உங்களுக்கு வேற ஆளு வேணும்..? எப்பேர்ப்பட்ட திறமைசாலியை ஒதுக்கிட்டீங்களே..? பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 18, 2019, 2:16 PM IST
Highlights

ஓர் அருமையான திறமைசாலியை உலக கோப்பையில் இந்திய அணி மிஸ் செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் திருப்தியடைந்தது.

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இந்திய அணி 4ம் வரிசையில் நிறைய வீரர்களை பரிசோதித்துவிட்டது. ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் சங்கர் என பலர் இருக்கலாம். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணி வாய்ப்பளித்திருக்கலாம். ஷ்ரேயாஸ் ஒரு மிகச்சிறந்த வீரர். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். ஐபிஎல்லில் அவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. அவர் 4ம் வரிசைக்கு சிறந்த தேர்வாக இருந்திருப்பார் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போதைக்கு கிட்டத்தட்ட இந்திய அணி உறுதியாகிவிட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவதற்கான சாத்தியம் மிகக்குறைவு. எனினும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். 
 

click me!