வேற ஆளே கிடைக்கலயா..? இவருலாம் ஒரு ஆளுனு இவரப்போயி எடுத்து வச்சுருக்கீங்க

By karthikeyan VFirst Published Mar 18, 2019, 1:27 PM IST
Highlights

11 வீரர்களை கொண்ட அணியில் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக உள்ளனர். 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா 2 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ்(முன்பு டெல்லி டேர்டெவில்ஸ்), ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த மூன்று அணிகளுமே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் கோலி தலைமையிலான ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல்லில் ரெய்னா, தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல், பிராவோ ஆகிய வீரர்கள் வெற்றிகரமான வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களை போன்ற சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

ஐபிஎல் 12வது சீசன் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல்லில் ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அந்த அணியின் கேப்டனாக தோனியை தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றும் ரோஹித் உள்ளனர். கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா ஆகியோரை கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சு ஜோடியாக பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் டிவில்லியர்ஸ் மற்றும் பிராவோவும் உள்ளனர்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணி:

கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா, தோனி(கேப்டன்), பிராவோ, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்பஜன் சிங்.

இவர்களில் மற்ற வீரர்கள் எல்லாம் ஓகே. ஆனால் ஹர்பஜன் சிங்கை ஏன் தேர்வு செய்தார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. ஹர்பஜன் சிங் ஒன்றும் ஐபிஎல்லில் அவ்வளவும் மிரட்டலாக எல்லாம் ஆடியது இல்லை. ஆஃப்கானிஸ்தான் ரிஸ்ட் ஸ்பின்னர் மற்றும் ஆல்ரவுண்டரான ரஷீத் கானெல்லாம் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார். ரஷீத் மற்றும் அவரைப்போல மேலும் சில ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில், ஹர்பஜனை தேர்வு செய்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை 10 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஆடினார். இந்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் ஆடுகிறார். 

click me!