ஏன் என்னையலாம் பார்த்தா ஆளா தெரியலயா? நாலாவது இடத்துக்கு நான் தான் சரியான ஆளு.. அதுக்கு மேல உங்க விருப்பம்!! தெறிக்கவிட்ட டெஸ்ட் வீரர்

By karthikeyan VFirst Published Mar 18, 2019, 12:06 PM IST
Highlights

இந்திய அணியின் தீராத சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசையில் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்றும் ஃபினிஷர் வேலையை கூட செவ்வனே செய்ய முடியும் என்றும் இந்திய டெஸ்ட் வீரர் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் திருப்தியடைந்தது.

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

நான்காம் வரிசை வீரருக்கான இழுபறி நீடித்துவரும் நிலையில், கும்ப்ளே, கங்குலி, பாண்டிங், ஹைடன் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். தோனி, கேஎல் ராகுல், புஜாரா, விஜய் சங்கர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீரரை பரிந்துரைத்து வருகின்றனர். 

இதற்கிடையே இந்திய அணியில் அண்மைக்காலமாக ஆடாத ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் கூட, ஐபிஎல்லில் அதிரடியாக ஆடி உலக கோப்பை அணியில் இணையும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில் ஹனுமா விஹாரி, தன்னால் நான்காம் வரிசையில் சிறப்பாக ஆட முடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹனுமா விஹாரி, இந்திய அணியின் சிக்கலாக இருக்கும் 4ம் வரிசையில் என்னால் சிறப்பாக ஆட முடியும். அந்த இடத்திற்கு நான் சரியான நபர் என்று கருதுகிறேன். என்னிடம் சிறந்த பேட்டிங் டெக்னிக் உள்ளது. எந்த சூழலுக்கு ஏற்றவாறும் ஆடக்கூடிய திறன் என்னிடம் உள்ளது. சூழலுக்கு ஏற்ப நான் சிறப்பாக பேட்டிங் செய்வேன். அதனால் 4ம் வரிசையில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். ஃபினிஷர் வேலையை கூட என்னால் செய்ய முடியும். உலக கோப்பையை பற்றி சிந்திக்கும் முன், எனக்கு இருக்கும் பெரிய சவால் ஐபிஎல். ஐபிஎல்லில் சிறப்பாக ஆட வேண்டும். இந்தியா ஏ அணிக்காக ஒருநாள் போட்டிகளில் நான் நன்றாக ஆடியிருக்கிறேன். தீராத வேட்கை இருக்குமேயானால் நமது பணியை வெற்றிகரமாக செய்ய முடியும். என்னிடம் தீராத வேட்கை இருக்கிறது என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். 

மேலும் நல்ல பேட்டிங் டெக்னிக் உள்ள பேட்ஸ்மேனால் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆட முடியும். அந்த வகையில் நான் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவேன். ஆனால் நான் ஒரு டெஸ்ட் வீரர் என்று சிலர் கருதுவது முதிர்ச்சியற்ற சிந்தனை என்று தெரிவித்துள்ளார். 

ஹனுமா விஹாரி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் ஆடினார். இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 167 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவரை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்துள்ளது. 
 

click me!