
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவரும் வேளையில், ஐபிஎல் மட்டுமே மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை அளித்துவந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது கொரோனா.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு, அது ஆஸ்திரேலியர்களாகவே இருந்தாலும் சரி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி நாட்டிற்கு திரும்புவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுகுறித்து ஆஸி., அரசிடமும், பிசிசிஐயிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேகேஆர் அணியில் ஆடும் ஆஸி., வீரர் பாட் கம்மின்ஸ், ஆஸி., அரசின் அறிவிப்பை கேட்டு ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தோம். ஆனால் மே 15ம் தேதிக்கு பிறகு ஆஸ்திரேலியா செல்லலாம் என்பதால், அதுவரை காத்திருந்து செல்வோம். அதுமட்டுமல்லாது, இந்தியாவிற்கு வரும்போதே, 14 நாட்கள் குவாரண்டினில் இருந்துவிட்டுத்தான் நாடு திரும்புவோம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டுத்தான் வந்தோம். எனவே குவாரண்டினை முடித்து முறைப்படி 15ம் தேதிக்கு பிறகு செல்வோம் என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.