தடை அதை உடை..! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு படையெடுக்கும் ஆஸி., வீரர்கள்..!

By karthikeyan VFirst Published May 4, 2021, 10:04 PM IST
Highlights

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல்லில் ஆடுவதற்காக இந்தியாவில் இருக்கும் ஆஸி., வீரர்கள், ஐபிஎல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆஸ்திரேலியா செல்வதற்கு புதிய ரூட்டை கண்டுபிடித்துள்ளனர்.
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவரும் வேளையில், ஐபிஎல் மட்டுமே மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை அளித்துவந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது கொரோனா.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு, அது ஆஸ்திரேலியர்களாகவே இருந்தாலும் சரி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி நாட்டிற்கு திரும்புவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுகுறித்து ஆஸி., அரசிடமும், பிசிசிஐயிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர், இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் அங்கு சென்றுள்ளார். ஸ்லேட்டர் வழியைப் பின்பற்றி ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 40 பேரும் மாலத்தீவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து நேராக மாலத்தீவுக்குச் சென்று பிறகு மே 15ம் தேதிக்குப் பிறகு மாலத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!