ஆர்சிபிக்கு ஆதரவு தெரிவித்த சுதாகர் - ஜியோ சினிமா தமிழ் ஸ்டூடியோவில் பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர்!

By Rsiva kumarFirst Published Mar 22, 2024, 6:50 PM IST
Highlights

ஜியோ சினிமா தமிழ் ஸ்டூடிவியோவில் ஐபிஎல் பரிதாபங்கள் நிகழ்ச்சியில் பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர் இருவரும் கலந்து கொண்டு ஐபிஎல் இன்றைய போட்டி குறித்து கலந்துரையாடினர்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ஏஆர் ரஹ்மான், சோனு நிகம் மற்றும் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராப்பின் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த ஐபிஎல் தொடர் பிரம்மண்டமாக தொடங்குகிறது. இதையடுத்து முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியதோடு தோனியின் கேப்டன்ஷியின் சகாப்தம் முடிந்துவிட்டது. இன்று தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியின் மூலமாக தோனி ஒரு பீல்டராக களமிறங்குகிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த தோனி அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஃபிட்டாக இந்த சீசனில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த சீசன் முழுவதும் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய தோனி 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 7 கேட்சுகள், 3 ஸ்டெம்பிங் அடங்கும். இந்த நிலையில் தான் ஜியோ சினிமா தமிழ் ஸ்டூடிவியோவில் ஐபிஎல் பரிதாபங்கள் நிகழ்ச்சியில் பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர் இருவரும் கலந்து கொண்டு ஐபிஎல் இன்றைய போட்டி குறித்து கலந்துரையாடினர். இதில், சுதாகர் ஆர்சிபி அணிக்கு ஆதரவாக கலந்து கொண்டு இந்த முறை ஆர்சிபி தான் டிராபியை கைப்பற்றும் என்று கூறினார். ஈ சாலா கப் நம்து என்று குறிப்பிட்டார்.

click me!