டி20 உலக கோப்பை: அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா அபார பவுலிங்..! இந்தியாவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Oct 23, 2022, 3:29 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் 159 ரன்களை அடித்து 160  ரன்கள் என்ற இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆடவில்லை. ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடினார்கள். 

இதையும் படிங்க - முடியாததை முடித்து காட்டியிருக்கார்.. இப்படி ஒரு வீரரை நான் பார்த்ததே இல்ல! இந்திய வீரருக்கு பாண்டிங் புகழாரம்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது, ஆசிஃப் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாமை, 2வது ஓவரில் தனது பந்திலேயே வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். பாபர் அசாம் ரன்னே அடிக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ரிஸ்வானையும் 4 ரன்னுக்கு அனுப்பினார் அர்ஷ்தீப் சிங்.

அதன்பின்னர் ஷான் மசூத் மற்றும் இஃப்டிகார் அகமது இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஃப்டிகார் அகமது, 34 பந்தில் 51 ரன்கள் அடித்த நிலையில், அவரை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் முகமது ஷமி.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா

அதன்பின்னர் ஷதாப் கான்(5), ஹைதர் அலி(2) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஷான் மசூத் அரைசதம் அடித்தார். கடைசியில் ஷாஹீன் அஃப்ரிடி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 160 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!