உலக கோப்பை 2019: இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் குடுமி

By karthikeyan VFirst Published Jun 28, 2019, 2:03 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி 7 போட்டிகளை ஆடியுள்ள நிலையில், 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. பாகிஸ்தான் அணி தொடர் வெற்றிகளை பெற்ற அதேவேளையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது. 

பாகிஸ்தான் அணி 7 போட்டிகளை ஆடியுள்ள நிலையில், 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியோ, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணி தோற்றால், பாகிஸ்தான் அணி இரண்டிலும் வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இலங்கை அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. ஆனால் மிகவும் கடினமான வாய்ப்பு. இதுவரை அந்த அணி 6 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 3 போட்டிகளிலும் அந்த அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றால் அரையிறுதிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்புக்கும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தோற்க வேண்டும். பாகிஸ்தான் எஞ்சிய 2 போட்டியிலும் வென்று இலங்கை அணி எஞ்சிய 3 போட்டியிலும் வென்றால் ரன்ரேட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் தான் அரையிறுதிக்கு முன்னேறும். வங்கதேசத்துக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. ஆனால் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கான வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளுமே அந்த அணிகளுக்கு எஞ்சியுள்ள போட்டிகளில் ஒரு போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்கொள்கிறது. எனவே அந்த அணிகள் இந்தியாவை வீழ்த்துவது எளிதல்ல.

இங்கிலாந்து அணியும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. எனவே ஒன்றில் தோற்றால் கூட அந்த அணிக்கும் கஷ்டம். இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்புதான் அதிகமுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை இந்திய அணி கண்டிப்பாக வீழ்த்திவிடும். அந்த 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் தான். ஆனால் அரையிறுதிக்கு முன்னேறுவதில் பாகிஸ்தானுக்கு கடும்போட்டியாக இருப்பது இங்கிலாந்துதான். எனவே இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தினால், பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும். ஏனெனில் பாகிஸ்தான் அணி கடைசி 2 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளைத்தான் எதிர்கொள்ள உள்ளது. அந்த 2 அணிகளையுமே பாகிஸ்தான் வீழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்த வேண்டும் என்றே பாகிஸ்தான் நினைக்கும். பாகிஸ்தானின் குடுமி இந்தியாவின் கையில் உள்ளது. 

click me!