Asia Cup: ரிஸ்வான், நவாஸ் அதிரடி பேட்டிங்.. இந்தியாவை வீழ்த்தி பழிதீர்த்த பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Sep 4, 2022, 11:29 PM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்தது பாகிஸ்தான்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், குஷ்தில் ஷா, இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.

இதையும் படிங்க - தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர்..? ராகுல் டிராவிட் ஓபன் டாக்
 
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடினர். ரோஹித் சர்மா 16 பந்தில் 28 ரன்களும், கேஎல் ராகுல் 20 பந்தில் 28 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  இவர்களின் அதிரடியால் பவர்ப்ளே 6 ஓவரில் 62 ரன்களை குவித்தது இந்திய அணி. அதன்பின்னர் விராட் கோலி மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ்(13), ரிஷப் பண்ட் (14), ஹர்திக் பாண்டியா(0), தீபக் ஹூடா (16) ஆகியோர் மறுமுனையில் ஏமாற்றமளித்து ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்தார். 44 பந்தில் 60 ரன்களை குவித்தார் கோலி. கோலி ஃபார்மில் இல்லை என்று கூறப்படும் நிலையில், முக்கியமான ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். கோலியின் அரைசதத்தால் 20 ஓவரில் 181 ரன்களை குவித்த இந்திய அணி, 182 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது.

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் 14 ரன்களிலும், 3ம் வரிசையில் இறங்கிய ஃபகர் ஜமான் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் முகமது  ரிஸ்வான் வழக்கம்போல நன்றாக ஆடினார்.

4ம் வரிசையில் முகமது  நவாஸ் அடித்து ஆடுவதற்காக இறக்கிவிடப்பட்டார். அதற்கு ஏற்றாற்போல் அடித்து ஆடிய நவாஸ் 20 பந்தில் 42 ரன்கள் அடித்து பெரும் அச்சுறுத்தலாக திகழ,  அவரை 42 ரன்களுக்கு புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். அரைசதம் அடித்து அச்சுறுத்திய ரிஸ்வானை சரியான நேரத்தில் இந்தியாவிற்கு அவரது விக்கெட் தேவைப்பட்ட சமயத்தில் 17வது ஓவரில் ரிஸ்வானை 71 ரன்களுக்கு வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா.

இதையும் படிங்க - விராட் கோலியால் சூர்யகுமார் யாதவை நெருங்கக்கூட முடியாது..! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிரடி

கடைசி 2 ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட, ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து அதிரடியாக ஆடி இலக்கை நெருங்கிய நிலையில், வெற்றிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்டபோது ஆசிஃப் அலி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு இந்தியாவை பழிதீர்த்தது.
 

click me!